உயர்ஸ்தானிகர்களுடன் கூட்டமைப்பினர் கலந்துரையாடல்

இந்திய, பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுடன் கூட்டமைப்பினர் கலந்துரையாடல்

by Staff Writer 12-11-2021 | 7:41 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கைக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை கொழும்பில் நேற்றிரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், தவராசா கலையரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அத்துடன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தார். புதிய அரசியலமைப்பு மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார். அத்துடன், இந்திய இலங்கை மக்களுக்கிடையிலான தொடர்பாடல், இராமேஸ்வரம் படகுச் சேவை, பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை அபிவிருத்தி குறித்தும் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தம் தொடர்பில் இதன்போது பேசப்பட்டதுடன், தமக்கென இருக்கும் ஒரே ஒரு திருத்தம் இதுவென்பதால் இதனை விட்டுவிட முடியாது என்பதை இந்திய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துக்கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். இதனிடையே, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை (Sarah Hulton) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கொழும்பில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.