ராகலை தீ; இரசாயன பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிப்பு

ராகலையில் 5 உயிர்களை காவு கொண்ட தீ சம்பவம் தொடர்பான அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

by Staff Writer 08-11-2021 | 8:30 PM
Colombo (News 1st) நுவரெலியா - ராகலை தோட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர்  உயிரிழப்பிற்கு காரணமாக தீ விபத்து தொடர்பான அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வலப்பனை நீதவான் டி.ஆர்.எஸ். ஜினதாச முன்னிலையில் பகுப்பாய்வு அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகள் ஆகியன இன்று (08) சமர்ப்பிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். தீ பற்றிய வீட்டில் பெட்ரோல் பயன்படுத்தப்பட்டமை இரசாயன பகுப்பாய்வினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இதன்போது மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தவில்லை. தீச் சம்பவத்தில் உயிரிழந்த ராமையா தங்கையா என்பவரின் மகனே இவ்வாறு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அடுத்த வழக்கு விசாரணையின் போது, மேலதிக விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறும் அன்றைய தினம் வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும் இதன்போது உத்தரவிடப்பட்டுள்ளது. நுவரெலியா - ராகலை தோட்டம் முதலாம் பிரிவிலுள்ள தற்காலிக வீடொன்றில் கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி இரவு தீ பரவியது. இதன்போது வீட்டிற்குள்ளிருந்த 05 பேரும் தீக்கிரையாகிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். குறித்த வீட்டில் 06 பேர் வசித்து வந்த நிலையில், ஒரு வயது மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்கள் உட்பட ஐவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.