உயிர் பிரியும் தருவாயிலும் பல உயிர்களை காப்பாற்றிவிட்டு இவ்வுலகை விட்டு பிரிந்தார் அன்டன் ஜெயராசா

by Staff Writer 08-11-2021 | 8:59 PM
Colombo (News 1st) உயிர் பிரியும் தருவாயிலும் தன்னை நம்பி வந்தவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் செயற்பட்ட வவுனியா - வீரபுரத்தைச் சேர்ந்த சாரதியின் இறுதிக் கிரியை இன்று (08) நடைபெற்றது. வவுனியா வீரபுரத்தைச் சேர்ந்த 60 வயதான அன்டன் ஜெயராசா எனும் சாரதி நேற்று முன்தினம் (06) மாரடைப்பினால் உயிரிழந்தார். வவுனியாவிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாதாந்த சிகிச்சைகளுக்காகச் செல்லும் நோயாளர்களை கடந்த 06ஆம் திகதியும் வழமைபோன்று தமது வேனில் அன்டன் ஜெயராசா ஏற்றிச் சென்றார். 10 பேருடன் சங்குப்பிட்டி பாலத்தை வாகனம் நெருங்கியபோது ஜெயராசா நெஞ்சு வலியினால் அவதிப்பட்டு, வாகனத்தை வீதி ஓரமாக நிறுத்தியுள்ளார். தன்னை நம்பி வந்தவர்களைக் காப்பாற்றிய ஜெயராசா, அவ்விடத்திலேயே இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். அன்டன் ஜெயராசாவின் பூதவுடல் வீரபுரத்திலுள்ள மயானத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.