பயண பொதியிலிருந்து சடலம் மீட்பு: இருவர் கைது

பயண பொதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் இருவர் கைது

by Staff Writer 06-11-2021 | 2:04 PM
Colombo (News 1st) சப்புகஸ்கந்த அரிசி ஆலை சந்தி பகுதியிலுள்ள குப்பை மேட்டிலிருந்து, பயணப் பொதியிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆணொருவரும் பெண்ணொருவருமே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு பிள்ளைகளின் தாயான 42 வயதான பாத்திமா முன்டாஸ் எனும் பெண்ணே நேற்று (05) பயணப் பொதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் வசித்த குறித்த பெண், கொலை செய்யப்பட்டு பயணப் பொதியில் வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் கணவரால் தனது மனைவி காணாமற்போயுள்ளதாக கடந்த 28 ஆம் திகதி புளூமென்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த பெண், மற்றுமொரு பெண்ணுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பேலியகொடை குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.