நெலும்வில மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு மக்கள் சக்தியினால் தீர்வு

by Staff Writer 06-11-2021 | 1:50 PM
Colombo (News 1st) அனுராதபுரம் மாவட்டத்தின் மஹவிலச்சிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல கிராம மக்கள் எதிர்நோக்கி வரும் குடிநீர் பிரச்சினைக்கு மக்கள் சக்தியூடாக தீர்வு வழங்கப்படுகின்றது. இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (06) முற்பகல் இடம்பெற்றது. நெலும்வில மற்றும் அதனை அண்டிய 22 கிராமங்களில் சுமார் 650 இற்கும் அதிக குடும்பங்களை சேர்ந்தோர் இதன்மூலம் பயனடையவுள்ளனர். குழாய் கிணறுகளினூடாக கிடைக்கும் குடிநீரில் கல்சியம் அதிக காணப்படுவதன் காரணமாக இவர்கள் பணம் செலுத்தியே சுத்தமான குடிநீரை பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குழாய் கிணறுகளின் மூலம் கிடைக்கும் உவர் நீரை அருந்தியமையால், அப்பகுதியில் 150 இற்கும் மேற்பட்டோர் சிறுநீரக நோயினால் அவதியுறுகின்ற அதேநேரம், சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் எதிர்நோக்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில், மக்கள் சக்தி சுத்தமான குடிநீர் திட்டத்தை வழங்குவதற்கு தீர்மானித்தது. டெனிசன் மற்றும் வினீதா ரொட்ரிகோ ஆகியோரின் நிதி உதவியுடன் இந்த குடிநீர் திட்டம் அமைக்கப்படவுள்ளது.