வவுனியா கல்லாற்று பாலத்தில் செல்ஃபி எடுக்க முற்பட்ட இளைஞர் ரயிலில் மோதி பலி

by Bella Dalima 05-11-2021 | 4:27 PM
Colombo (News 1st) வவுனியா - கல்லாற்று பாலத்தில் செல்ஃபி எடுக்க முற்பட்ட இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மதவாச்சி - மன்னார் வீதியில் கல்லாற்று பாலத்தில் இன்று காலை 8.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மன்னார் - முருங்கன் பகுதியில் இருந்து செட்டிக்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்கள், செட்டிக்குளம் கல்லாற்று பாலத்தில் ஏறி தங்களது கையடக்கதொலைபேசியில் செல்ஃபி எடுக்க முற்பட்டுள்ளனர். இதன்போது, மன்னார் பியர் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலில் மோதி விபத்திற்குள்ளாகினர். விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றைய ஒருவர் பாலத்தின் கீழே குதித்து உயிர் பிழைத்துள்ளார். சம்பவத்தில் முருங்கன் பரியாரி கண்டல் பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார்.