சம்மாந்துறையில் பிறந்து 3 நாட்களேயான குழந்தை கொலை: இருவருக்கு விளக்கமறியல்

by Bella Dalima 05-11-2021 | 4:37 PM
Colombo (News 1st) சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் பிறந்த குழந்தையை கொலை செய்து புதைத்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த குழந்தையின் தாயான 19 வயது யுவதியும் குறித்த யுவதியின் 40 வயதான தந்தையுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் (03) கைது செய்யப்பட்டு, 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 25 ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளதுடன், கடந்த 28 ஆம் திகதி குழந்தையை கொலை செய்து புதைத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதற்கமைய, புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் இன்று காலை தோண்டியெடுக்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதுடன், எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.