காணாமற்போனவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

காணாமற்போனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி உறுதி: டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

by Bella Dalima 05-11-2021 | 5:34 PM
Colombo (News 1st) காணாமற்போனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் காணாமல் போனவர்கள் குறித்து அவர்தம் உறவுகள் தம்மை சந்தித்து தீர்வை பெற்றுத்தருமாறு கோரியதை அடுத்து, இது தொடர்பில் ஜனாதிபதியுடன் தாம் கலந்துரையாடியதாக கடற்றொழில் அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் காணாமற்போனவர்களின் உறவினர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு, அவர்களுடன் கலந்துரையாடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் காணாமல் போனவர்களின் பிரச்சினை பல வருட காலமாக தொடர்வதாகவும் கடந்த அரசாங்க காலத்தில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அது இடம்பெறவில்லையெனவும் ஜனாதிபதி அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சர் இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்காக அயராது உழைப்பதாக பாராட்டுத் தெரிவித்த ஜனாதிபதி, அதன்பொருட்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததாகவும் கடற்றொழில் அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.