NMRA: நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளது

அழிவடைந்த NMRA தரவுகளை மீள பெற்றுக்கொள்ள நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளது

by Bella Dalima 05-11-2021 | 12:05 PM
Colombo (News 1st) தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் (NMRA) அழிவடைந்த தரவுகளை மீள பெற்றுக்கொள்வதற்காக விசேட நிபுணர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. தரவுத்தளத்திற்கு பொறுப்பான நிறுவனத்தினூடாக குறித்த விசேட நிபுணர்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஔடதங்கள் உற்பத்தி, ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார். இதனை முன்னிட்டு தகுதிவாய்ந்த 4 விசேட நிபுணர்கள் தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் இலங்கையை சேர்ந்தவர்கள் என ஔடதங்கள் உற்பத்தி, ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். இதன் பிரகாரம், அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவினால் பொருத்தமான நிபுணர் தெரிவு செய்யப்படவுள்ளார். தரவுகளை மீளப்பெற்றுக்கொள்வது தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் நடவடிக்கைகளும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார். தரவுத்தளத்திற்கு பொறுப்பான நிறுவனம், தரவுகளை மீள பெற்றுக்கொள்வதற்கான திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன், அதற்கான அனுமதி கிடைத்தவுடன் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவுகளை மீள பெற்றுக்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முழுமையான கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக ஔடதங்கள் உற்பத்தி, ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.