ஜனாதிபதி, பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

அறத்தின் ஆட்சியையும் ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாள் தீபாவளி: ஜனாதிபதி வாழ்த்து

by Bella Dalima 04-11-2021 | 11:44 AM
Colombo (News 1st) உலகவாழ் இந்துக்கள் இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்துக்களின் ஆன்மீக வழிபாடாகவும் பாரம்பரிய கலாசார பெருவிழாவாகவுமுள்ள தீபாவளித் திருநாள் மூலம் வாழ்வின் துன்பங்கள் நீங்கி இன்பங்களை அடைந்துகொள்வதே நோக்கமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த தீபத்திருநாள் அறத்தின் ஆட்சியையும் ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாள் என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். தீபாவளி திருநாளில் பிரபஞ்சத்திற்கு பிரவேசமாகும் சுப சக்தியால் உலக மக்கள் யாவருக்கும் மகிழ்ச்சி, சௌபாக்கியம், செல்வம் மற்றும் தெய்வ அருள் கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சிறந்ததோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக இந்த தீபாவளி நன்னாள் அமையட்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தும் COVID-19 நோய்த்தொற்றில் இருந்து இலங்கை மக்களை பாதுகாக்கும் பணியோடு பல முன்னேற்றகரமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.