by Bella Dalima 02-11-2021 | 4:46 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தம்மை கைது செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சியை தடுப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர், அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 07 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச மக்களை தௌிவூட்டுவதற்காக Zoom தொழில்நுட்பத்தினூடாக கடந்த 25 ஆம் திகதி நடத்தப்பட்ட கலந்துரையாடல் குறித்து சுரேஷ் சாலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய நாளைய தினம் (03) தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அருட்தந்தை சிறில் காமினி தனது மனுவில் கூறியுள்ளார்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் தம்மை கைது செய்வதற்கான திட்டங்கள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தனது மனுவை நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும், மனு மீதான விசாரணை நிறைவு பெறும் வரை தாம் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கான உத்தரவை பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பிறப்பிக்குமாறும் அருட்தந்தை சிறில் காமினி தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.