8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

by Bella Dalima 02-11-2021 | 11:55 AM
Colombo (News 1st) நாட்டின் 8 மாவட்டங்களின் 22 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலாளர் பிரிவிற்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்கும் காலி மாவட்டத்தின் நெலுவ, எல்பிட்டி, நாகொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவிற்கும் முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். இதனை தவிர, கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர, கங்க இஹல கோரள, ஹாரிஸ்பத்துவ, கங்க வட்ட கோரள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கோகாலை மாவட்டத்தின் அரநாயக்க, மாவனெல்ல, புலத்கொஹூபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மாத்தளை மாவட்டத்தின் இரத்தொட்ட பிரதேச செயலாளர் பிரிவிற்கும் இரத்தனபுரி மாவட்டத்தின் வெலிகபொல, எஹலியகொட, இரத்தினபுரி, கலவான, கஹவத்த மற்றும் இம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவிற்கும் முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நாளை மாலை வரை நீடிக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். இதேவேளை, மொனராகலை மாவட்டத்தின் கும்புக்கன் ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வௌ்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் இன்றும் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.