தரமற்ற உரத்துடன் பயணிக்கும் சீன கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் மீண்டும் நுழைந்தது

by Bella Dalima 02-11-2021 | 9:39 PM
Colombo (News 1st) சில நாட்கள் காணாமற்போயிருந்த சீனாவின் ​சேதனப் பசளை ஏற்றிய கப்பல் Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் இன்று மீண்டும் நுழைந்தது. மாத்தறை - வெலிகமையில் இருந்து 61 கடல்மைல் தொலைவில் குறித்த கப்பல் உள்ளது. பனாமா கொடியின் கீழ் பயணிக்கும் குறித்த கப்பல் மீண்டும் சர்வதேச கப்பல் போக்குவரத்து தொடர்பிலான தரவுக்கட்டமைப்பில் Hippo Spirit என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெலிகமையில் இருந்து 61 கடல்மைல் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல் கொழும்பு துறைமுகத்தை நோக்கி நகர்ந்தவண்ணமுள்ளதாக சர்வதேச கப்பல்களின் பயணம் தொடர்பிலான தரவுக்கட்டமைப்பின் மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா அடங்கியுள்ளதாக தேசிய தாவர தடுப்புக் காப்புச்சேவையினால் இரண்டு தடவைகள் உறுதிப்படுத்தப்பட்ட 20 மெட்ரிக் தொன் சேதனப் பசளையை ஏற்றி குறித்த கப்பல் பயணிக்கின்றது.