142 கோடி ரூபா செலவில் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள்

இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள்: அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

by Bella Dalima 02-11-2021 | 3:05 PM
Colombo (News 1st) தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்காக புதிய வீடுகளை கட்டிக்கொடுக்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் முதற்கட்டமாக 142.16 கோடி இந்திய ரூபா செலவில் 3,510 புதிய வீடுகள் கட்டப்படவுள்ளன. தமிழகத்தில் முகாம்களில் வாழும் 19,046 இலங்கை தமிழர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் 3,510 வீடுகள் கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் மேல்மொணவூரில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார். மேலும் 30 கோடி இந்திய ரூபா மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார். தமிழகத்தில் 106 முகாம்களில் வசிக்கும் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புகள் அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்படவுள்ளன.