யானை தாக்கி விவசாயி பலி: ஒன்றரை கிலோமீட்டர் சடலத்தை தூக்கிச்சென்ற செங்கலடி மக்கள்

by Staff Writer 01-11-2021 | 7:17 PM
Colombo (News 1st) காட்டு யானை தாக்கி உயிரிழந்த ஒருவரின் சடலத்தை சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் மக்கள் தூக்கிச்சென்ற சம்பவம் மட்டக்களப்பு - செங்கலடியில் இன்று பதிவானது. பாலத்தைக் கடந்து வாகனங்கள் செல்ல முடியாதென்பதால், யானை தாக்கி உயிரிழந்தவரின் சடலத்தை தூக்கிச் செல்ல வேண்டிய நிலையேற்பட்டது. யானைகள் அதிகளவில் நடமாடும் செங்கலடி - கறுத்தப்பாலம் பகுதியில் இன்று முற்பகல் 10.30 அளவில் விவசாயி ஒருவரை யானை தாக்கியது. விவசாய நிலத்திற்குள் பிரவேசித்த மாடுகளை விரட்டச்சென்ற போது பற்றைக்காட்டுக்குள் மறைந்திருந்த யானை அவரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வந்தாறுமூலையை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 61 வயதுடைய நாகலிங்கம் தாமோதரம் என்பவரின் உயிரே காவு கொள்ளப்பட்டுள்ளது. யானை பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாமைக்கு தமது எதிர்ப்பை வௌிப்படுத்தி வைத்தியசாலை வரை சடலத்தை மக்கள் சுமந்து சென்றனர். சம்பவம் இடம்பெற்ற கறுத்தப்பாலம் ''முந்தனை ஆற்றுத் தீவு'' எனும் இடத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திலுள்ள செங்கலடி பிரதேச வைத்தியசாலை வரை மக்கள் சடலத்தை சுமந்து சென்றனர். செங்கலடி பிரதேச வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எச்.ஏ.ஹக்கீம் விசாரணைகளை நடத்தினார். இதனையடுத்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கறுத்தப்பாலம் பகுதியில் கடந்த மாதம் 21ஆம் திகதி யானை தாக்கியதில் 64 வயதான ஒருவர் உயிரிழந்தார். குறித்த பகுதியில் நிலவும் காட்டு யானை பிரச்சினை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தது. எனினும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு பொறுப்புவாய்ந்தவர்கள் இதுவரை முன்வரவில்லை.