23 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு 

தடுத்து வைக்கப்பட்டுள்ள 23 இந்திய மீனவர்களை தூதரக அதிகாரிகள் பார்வையிட அனுமதி

by Bella Dalima 01-11-2021 | 4:03 PM
Colombo (News 1st) கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 23 இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் தொடர்பான விசாரணை இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, 23 பேரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை உத்தரவிட்டுள்ளார். இன்றைய வழக்கு விசாரணையின் போது, ஏற்கனவே மீனவர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன. இந்திய துணை தூதரக அதிகாரிகள் மீனவர்களை சந்திப்பதற்கு அனுமதி கோரப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கும் மன்றில் ஏற்கனவே அனுமதி கோரப்பட்டிருந்தது. சந்தேகநபர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அவர்களுக்கு வழங்க நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியதுடன், அவர்களை பார்வையிடுவதற்கு இந்திய துணை தூதரகத்தின் இரண்டு அதிகாரிகளுக்கும் அனுமதி வழங்கியது. இதனை தவிர, இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் மீனவர்கள் தமது உறவினர்களை தொடர்புகொள்வதற்கும் பருத்தித்துறை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அவர்களின் பெயர் விபரங்கள் முறையாக பதிவு செய்யப்படாததால், கடற்றொழில் திணைக்களம் ஏற்கனவே விடுத்த கோரிக்கைக்கு அமைய , குறித்த மீனவர்களின் பெயர் விபரங்களை சரியான முறையில் பதிவு செய்து, B அறிக்கையில் பதிவதற்கும் நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். சந்தேகநபர்கள் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.