சீனாவின் சேதன பசளை கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசம் 

by Staff Writer 31-10-2021 | 5:33 PM
Colombo (News 1st) ஆபத்தான நுண்ணுயிர்கள் அடங்கிய சேதனப் பசளையை ஏற்றிய Hippo Spirit கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளது. ஃப்லிட் மொன் என்ற சர்வதேச கடற்பயணங்கள் தொடர்பிலான தரவுகள் அடங்கிய இணையத்தளம் நேற்று (30) பதிவேற்றிய தரவுகளில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆபத்தான நுண்ணுயிர்கள் அடங்கிய சேதனப் பசளை ஏற்றப்பட்ட Hippo Spirit கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளதாக, நேற்று புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் ஊடாக Fleet Mon இணையத்தளம் தகவல் வௌியிட்டுள்ளது. Hippo Spirit கப்பலின் அடையாள இலக்கதைக் கொண்ட Seio Explore எனும் கப்பல் ஹம்பாந்தோட்டை கடற்பரப்பிற்குள் பிரவேசித்ததாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த கப்பல், எந்த துறைமுகத்திலிருந்து வருகை தந்துள்ளது என்பது தொடர்பில் அதில் குறிப்பிடப்படவில்லை. எவ்வாறாயினும், புதிய தரவுகளின் பிரகாரம் கடந்த 13 ஆம் திகதி மலாக்காவை அண்மித்த கடற்பிராந்தியத்திலிருந்து Hippo Spirit கப்பல், இலங்கை நோக்கி பயணத்தை முன்னெடுத்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 44.82 கடல்மைல் தொலைவிலும் துறைமுகத்தில் இருந்து 66.9 பாகையிலும் கடந்த 24 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் இந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. Hippo Spirit கப்பல், யால தேசிய சரணாலயத்திற்கு அருகில் 4.18 கடல்மைல் அருகில் இருந்ததையும் அவதானிக்க முடிந்தது. எனினும், அதன் பின்னர் கப்பல் தொழில்நுட்ப ரீதியாக செய்மதி பதிவுகளிலிருந்து இந்த கப்பல் மீண்டும் காணாமற்போனது. இன்று (31) மீண்டும் திருகோணமலை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக அதிகாரிகளிடம் கப்பல் தொடர்பில் நாம் வினவியபோது, குறித்த கப்பல் தமது ரேடார் கட்மைப்புக்குள் நுழைந்ததாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.