மொறட்டுவையில் பொலிஸார் மீது தாக்குதல்; 16 பேருக்கு விளக்கமறியல்

by Staff Writer 30-10-2021 | 9:01 PM
Colombo (News 1st) மொறட்டுவை - மாதங்கஹவத்த பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டில் 16 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் (30) சந்தேகநபர்கள் மொறட்டுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று (29) இரவு மொறட்டுவை - மாதங்கஹவத்த பிரதேசத்தில் வீடொன்றிற்குள் சிலர் தாக்குதல் மேற்கொள்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய மொறட்டுவை பொலிஸ் நிலையத்தில் சேவை புரிந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் குறித்த பிரதேசத்திற்கு சென்றிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் பிரச்சினைக்கு காரணமான தரப்பினரால் தாக்கப்பட்ட பொலிஸார் இருவரும் காயமடைந்துள்ளனர். அவர்களில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன், மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் 19 பேர் இன்று (30) காலை மொறட்டுவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று மொறட்டுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து 3 பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஏனைய சந்தேகநபர்களை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.