ஜனாதிபதி ஸ்கொட்லாந்து நோக்கி பயணம்

by Staff Writer 30-10-2021 | 11:36 AM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (30) ஸ்கொட்லாந்து நாட்டிற்கு பயணமானார். காலநிலை மாற்றம் மற்றும் அதனை எதிர்கொண்டு செயற்படுவதற்காக உலக நாடுகள் திட்டமிடும் வழிமுறைகள் தொடர்பாக கலந்துரையாடப்படும் இந்த மாநாடு, நாளை (31) தொடக்கம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை க்லாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் முதலாம் மற்றும் 02 ஆம் திகதி, உலகத் தலைவர்களின் மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 'காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தின் தீர்மானமிக்க சந்தர்ப்பங்கள்' எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த மாநாட்டில் 197 நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் இவ் விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.