by Staff Writer 30-10-2021 | 8:23 PM
Colombo (News 1st) கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சார்ஜனின் மரணத்தில் இடம்பெற்றுள்ள மர்மம் என்ன?
பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், கம்பளை வைத்தியசாலையில் சடலம் மீட்கப்பட்ட பிரதான நீர் தாங்கியை சுத்திகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரின் ஒத்துழைப்புடன் நீர் தாங்கியை சுத்திகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கம்பளை வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் கூறினார்.
நீர் தாங்கியிலிருந்து வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளுக்கும் வைத்தியர்களின் பயன்பாட்டிற்கும் நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் தேவைகளுக்காக நீரைப் பயன்படுத்தும் போது நேற்றைய தினம் (29) நீரில் துர்நாற்றம் வீசியமையினாலே நீர் தாங்கியை பரிசீலித்ததாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எம்.எச்.எம். நஸீம் தெரிவித்தார்.
அதன் பின்னரே சுமார் 50 அடி உயரமான நீர் தாங்கியில் இருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், நீரை பயன்படுத்தியதால் எவ்வித பாதிப்புகளும் இதுவரை பதிவாகவில்லை என கம்பளை வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை, நீர் தாங்கியிலிருந்து மீட்கப்பட்ட சடலம் கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சடலம் மீதான பிரேத பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கடந்த 51 நாட்களுக்கு முன்னர் வைத்திசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சார்ஜனின் சடலமே மீட்கப்பட்டதாக அவரின் உறவினர்கள் நேற்று (29) பொலிஸாரிடம் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.