குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பதிலளிக்க கால அவகாசம் கோரிய அருட்தந்தை சிறில் காமினி

by Staff Writer 28-10-2021 | 2:24 PM
Colombo (News 1st) காணொளி மாநாட்டில் வௌியிடப்பட்ட கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த அருட்தந்தை சிறில் காமினி, தமக்கு ஒரு வார கால அவகாசத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்கள் தொடர்பான விடயங்களை முன்னிலைப்படுத்தி அண்மையில் இடம்பெற்ற காணொளி கலந்துரையாடலின் போது வௌியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக, அருட்தந்தை சிறில் காமினி இன்று (28) அழைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார். எனினும், ஒரு வார கால அவகாசத்தை வழங்குமாறு அருட்தந்தை சாந்த குமார வெலிவிட்டவினூடாக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான இணையத்தள விவாதம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம், கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் நேற்று (27) அறிக்கை சமர்ப்பித்தது. இந்தக் கலந்துரையாடலில் தாம் தொடர்பில் பொய்யான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதாக அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி செய்த முறைப்பாட்டிற்கு ஏற்ப விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்