தமிழக மீனவர்கள் இருவரும் விடுதலை

by Staff Writer 27-10-2021 | 8:12 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கோவலம் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்து காப்பாற்றப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு மீனவர்களையும் விடுதலை செய்வதற்கான அனுமதி நேற்று (26) கிடைத்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். மீனவர்களை மீண்டும் தமிழகத்திற்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் கூறினர். புதுக்கோட்டை மாவட்டம் - கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 18 ஆம் திகதி விசைப்படகில் மீன்பிடிக்க புறப்பட்ட மூன்று மீனவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்தமையால் இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்ய முயன்றனர். இதன்போது தப்பிச்செல்ல முயற்சித்த தமிழக மீனவர்களின் படகு, கடற்படையினரின் படகுடன் மோதி விபத்துக்குள்ளானதுடன் சம்பவத்தில் ஒரு மீனவர் உயிரிழந்தார். ஏனைய இரண்டு மீனவர்களையும் கடற்படையினர் காப்பாற்றி கரைக்கு அழைத்துவந்த நிலையில் அவர்களை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. இந்த நிலையிலேயே குறித்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த இரண்டு மீனவர்கள் அடங்களாக இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 25 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரி இராமேஸ்வரம் மீனவர்களால் 05 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கிவருகின்ற நிலையில் மீனவர்கள் இன்று கடற்றொழிலை ஆரம்பிக்கவிருந்த நிலையில், சீரற்ற வானிலையால் அவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார். இதேவேளை, நேற்று (26) மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரு நாட்டு மீனவர்களின் விடுதலை தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.