தமது முறைப்பாட்டை முறையாக விசாரிக்க கோரி வவுனியா இளைஞர்கள் கோபுரத்தின் மீதேறி போராட்டம்...

by Staff Writer 27-10-2021 | 10:17 PM
Colombo (News 1st) வவுனியாவில் இளைஞர்கள் இருவர் கோபுரத்தின் மீதேறி போராட்டம் நடத்திய சம்பமொன்று இன்று (27) மாலை பதிவாகியுள்ளது. தாம் வழங்கிய முறைப்பாடு தொடர்பாக பொலிஸார் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என தெரிவித்தே குறித்த இளைஞர்கள் இருவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோபுரத்தின் உச்சியில் அபாயகரமான விதத்தில் இளைஞர்கள் இருவரும் ஏறியிருந்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்திருந்தனர். அத்துடன், அவ்விடத்துக்கு அம்பியூலன்ஸ் வாகனமும் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், குறித்த இளைஞர்களின் உறவினர்கள் A9 வீதியை மறித்து போராட்டம் நடத்தினர். எவ்வாறாயினும், இளைஞர்கள் முன்வைத்த முறைப்பாடு தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்துவதாக பொலிஸார் வாக்குறுதி அளித்ததை அடுத்து, இளைஞர்கள் இருவரும் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினர். அதன் பின்பு அவர்கள் அம்பியூலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.