காணாமற்போயிருந்த மீனவர்கள் நால்வர் கண்டுபிடிப்பு

காணாமற்போயிருந்த வாழைச்சேனை மீனவர்கள் நால்வர் கண்டுபிடிப்பு

by Bella Dalima 25-10-2021 | 11:39 AM
Colombo (News 1st) மட்டக்களப்பு - வாழைச்சேனையில் ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்று காணாமற்போயிருந்த 04 மீனவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்ட 04 மீனவர்களும் அந்தமான் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது. மீனவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 04 மீனவர்களும் திட்டமிட்ட தினத்திற்குள் கரை திரும்பாமை தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தினூடாக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பில் இலங்கை, இந்திய கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு தேடுதல் முன்னெடுக்கப்பட்டதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்தது.