மோட்டார் பந்தய ஓடுபாதை நிர்மாணிக்க திட்டம்?

ஹம்பாந்தோட்டையில் மோட்டார் பந்தய ஓடுபாதையை நிர்மாணிக்க திட்டம்?

by Staff Writer 24-10-2021 | 7:27 PM
Colombo (News 1st) விவசாயிகள் உரமின்றி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹம்பாந்தோட்டையில் FORMULA ONE மோட்டார் பந்தய ஓடுபாதை ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பாக கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக Sunday Times பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. இதற்கமைவாக, முதற்கட்ட கலந்துரையாடல் ஒன்று ஜப்பான் மற்றும் ஸ்பெயின் நாட்டு முதலீட்டாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி வௌியிடப்பட்டுள்ள பத்திரிகை செய்தியில், 5.6 கிலோமீட்டர் தூரம் கொண்ட ஓடுபாதையை அரசாங்க காணியில் நிர்மாணிக்க பிரேரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வளங்கள் மற்றும் உள்நாட்டு , வௌிநாட்டு நிபுணர்களின் நிபுணத்துவ ஆலோசனைகள் என்பன இதற்கு பயன்படுத்தப்படவுள்ளதுடன், ரேசிங் கார்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரையிறக்குவதற்கும் குறித்த போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக மத்தளை விமான நிலையத்தை பயன்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதலீட்டு சபையின் திட்டமாக இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.