விசேட பூஜை வழிபாடுகளில் 50 பேர் கலந்துகொள்ள அனுமதி

விசேட பூஜை வழிபாடுகளில் 50 பேர் கலந்துகொள்ள அனுமதி

by Staff Writer 24-10-2021 | 12:17 PM
Colombo (News 1st) மத வழிபாட்டு தலங்களில் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதற்கு மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், வழிபாடுகளில் 50 பேருக்கு அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார். விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறுகின்ற தினத்திற்கு மாத்திரமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனைய நாட்களில் வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தொற்று மீண்டும் பரவாதிருக்கும் வகையில் செயற்படுமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நாட்டில் தொடர்ந்தும் நாளொன்றில் சுமார் 500 கொரோனா நோயாளர்கள் பதிவாவதையும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். இதேவேளை, திறந்த வௌிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் 75 பேர் கலந்துகொள்வதற்கும் குளிரூட்டப்பட்ட அறைகளில் நடைபெறும் நிகழ்வுகளில் 75 பேர் கலந்துகொள்வதற்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், சில ஹோட்டல்களில் இரவு நேரங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோர் முகக்கவசமின்றி பங்கேற்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். கொரோனா தொற்று அபாயம் நாட்டில் நீடிப்பதால், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய செயற்படுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.