இந்தியாவில் கைதான இலங்கை மீனவர்களுக்கு விளக்கமறியல்

by Staff Writer 24-10-2021 | 12:00 PM
Colombo (News 1st) இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவரையும் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எழும்பூர் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் இரண்டு பேர் தமிழகத்தில் நேற்று முன்தினம் (22) கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். யாழ்ப்பாணம் - ஆதிகோவிலடி பகுதியை சேர்ந்த இரண்டு மீனவர்களே தமிழகத்தில் கைது செய்யப்பட்டு, சென்னை - புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இலங்கையின் வடக்கு கடற்பிராந்தியத்தில் படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி உயிரிழந்த கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரனின் சடலம் நேற்று (23) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.