அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்கள் மறைந்து 3 மாதங்கள் பூர்த்தி; மத அனுஷ்டானங்கள் முன்னெடுக்கப்பட்டன

by Staff Writer 24-10-2021 | 8:42 PM
Colombo (News 1st) கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் முன்னாள் தலைவர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்கள் மறைந்து மூன்று மாதங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்று (24) மத அனுஷ்டானங்கள் நடைபெற்றன. கெப்பிட்டல் மகாராஜா குழும தலைமையக வளாகத்தில் மத அனுஷ்டானங்கள் முன்னெடுக்கப்பட்டன. காலி - அம்பலாங்கொடை கல்தூவ விஹாரையை சேர்ந்த 20 தேரர்கள் மத அனுஷ்டானங்களுக்காக வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழும தலைமையகத்திற்கு அழைத்துவரப்பட்டனர். கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் சஷி ராஜமகேந்திரன் தலைமையிலான உயர் அதிகாரிகளும் ஊழியர்களும் இந்த மத அனுஷ்டானங்களில் பங்கேற்றிருந்தனர். மறைந்த அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்து மகா சங்கத்தினருக்கு தானம் வழங்கப்பட்டது. அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் மூன்று மாத நினைவு தினத்தை முன்னிட்டு பாரம்பரிய மருந்துகள் சேர்க்கப்பட்ட காவி உடை தயாரிக்கப்பட்டிருந்ததுடன், அந்த உடைகள் மகா சங்கத்தினருக்கு தானமாக வழங்கப்பட்டன. ஆர். ராஜமகேந்திரன் அவர்கள் மறைந்து மூன்று மாதங்கள் பூர்த்தியாகும் நாளைய தினத்தில், நாட்டிலுள்ள முக்கிய சிவாலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளன. அத்தோடு தர்மபோதனை நிகழ்வொன்றும் நடைபெறவுள்ளது.