by Bella Dalima 23-10-2021 | 11:54 AM
Colombo (News 1st) எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு பின்னர் மாகாணங்களுக்கு இடையில் பஸ் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
அதற்கமைய, எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மாகாணங்களுக்கு இடையில் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தயாராகுமாறு பஸ் உரிமையாளர்களுக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அரச மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் முதலாம் திகதிக்கு பின்னர் சேவையில் ஈடுபட முடியும் என்பதால், அதற்கான விசேட அனுமதி பெற வேண்டிய தேவையில்லை என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையில் ரயில் போக்குவரத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நாளை (24) ஞாயிற்றுக்கிழமை விசேட கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.
மாதாந்த பருவச்சீட்டு வைத்திருப்போருக்கு மாத்திரம் ரயில் போக்குவரத்தை முன்னெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பயணச்சீட்டுகளை விநியோகிக்காது, ரயில் சேவையை முன்னெடுப்பதிலுள்ள செலவுகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பு மாவட்டத்திற்குள் மாத்திரம் ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.