சேதன பசளையுடன் வரும் சீன கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அறிவிப்பு

by Bella Dalima 23-10-2021 | 1:08 PM
Colombo (News 1st) சீனாவிடமிருந்து நாட்டிற்கு சேதன பசளையை கொண்டுவரும் கப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாக ஹார்பர் மாஸ்டர், கெப்டன் நிர்மால் டி சில்வா தெரிவித்தார். 20,000 மெட்ரிக் தொன் சேதன பசளையுடன் குறித்த கப்பல் நேற்று (22) மாலை நாட்டை வந்தடையும் என தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையம் கொழும்பு துறைமுகத்திற்கு அறிவித்திருந்தது. நாட்டிற்கு வருகை தரும் கப்பலில் காணப்படும் பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் காணப்படுவதாகவும் தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையம் தெரிவித்திருந்தது. எனினும், குறித்த கப்பல் கொழும்பு துறைமுக எல்லைக்குள் இதுவரை பிரவேசிக்கவில்லை எனவும், வருகை தருவது தொடர்பில் எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை எனவும் ஹார்பர் மாஸ்டர் குறிப்பிட்டார். சீன நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளப்பட்ட பசளைகளின் மாதிரிகளில் பக்டீரியா காணப்படுகின்றமை இரண்டு சந்தர்ப்பங்களில் உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.