உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி

இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த புதுக்கோட்டை மீனவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி

by Bella Dalima 23-10-2021 | 12:32 PM
Colombo (News 1st) இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் படகு கவிழ்ந்தமையால் உயிரிழந்த புதுக்கோட்டை மீனவரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் இந்திய ரூபா நிவாரண உதவி வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். உயிரிழந்த மீனவர் ராஜ்கிரனின் குடும்பத்தாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகையை வழங்குமாறும் முதல்வர் பணிப்புரை விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 18 ஆம் திகதி விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற போது, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்தமையால் இலங்கை கடற்படையினரால் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டனர். இதன்போது, இந்திய மீனவர்களின் படகு கவிழ்ந்ததில் மூன்று பேர் கடலில் மூழ்கியதுடன், அவர்களில் இருவர் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டனர்.   உயிரிழந்த  மீனவரின் சடலம், இந்திய அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. சட்ட நடவடிக்கைகளின் பின்னர் இந்திய கரையோர காவல் படையிடம் முற்பகல் 9.20-க்கு சடலம் கையளிக்கப்பட்டதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்