மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு  31 ஆம் திகதி நீக்கப்படும்: சவேந்திர சில்வா அறிவிப்பு 

by Staff Writer 22-10-2021 | 2:20 PM
Colombo (News 1st) நாட்டில் தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்தார். இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி முதல் சுகாதார பிரிவு உள்ளிட்ட COVID முன்களப் பணியாளர்களுக்கு booster தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார். COVID ஒழிப்பு விசேட கூட்டம் ஜனாதிபதி தலைமையில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று பகல் இடம்பெற்றது. இந்த கூட்டத்தின் போது சுகாதாரம் , பாதுகாப்பு , விமான நிலையம் மற்றும் சுற்றுலாத்துறையின் முன்களப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக மூன்றாவது தடுப்பூசியாக Pfizer தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கையை நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தகைமையுடைய அனைத்து மாணவர்களுக்கும் எதிர்வரும் 2 வாரங்களில் COVID தடுப்பூசியை ஏற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.