பஸ்ஸில் கஞ்சா கடத்தல்: நடத்துநர் கைது

பஸ்ஸில் கஞ்சா கடத்தல்: நடத்துநர் உள்ளிட்ட இருவர் கைது

by Staff Writer 22-10-2021 | 11:28 AM
Colombo (News 1st) அக்கரைப்பற்றில் கஞ்சாவுடன் தனியார் பஸ் நடத்துநர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற தனியாருக்கு சொந்தமான பஸ் நடத்துநர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கஞ்சாவை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பஸ் நடத்துநர் மருதானையை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடமிருந்து 5 கிலோ 250 கிராம் நிறையுடைய கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (22) காலை 5 மணியளவில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.