கறுப்பு பூஞ்சை தொற்று: நாட்டில் முதல் மரணம் பதிவு

கறுப்பு பூஞ்சை தொற்று காரணமாக நாட்டில் முதல் மரணம் பதிவு

by Staff Writer 22-10-2021 | 6:03 PM
Colombo (News 1st) நாட்டில் முதற்தடவையாக COVID நிமோனியாவுடன் தொடர்புடைய கறுப்பு பூஞ்சை தொற்றுக்குள்ளான ஒருவர் காலி - கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். எல்பிட்டிய பகுதியை சேர்ந்த 56 வயதான ஒருவரே கறுப்பு பூஞ்சை தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய விசேட நிபுணர் ரொஹான் பீ. ருவன்புர குறிப்பிட்டார் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி குறித்த நபர் உயிரிழந்துள்ளார் சடலம் மீதான பிரேத பரிசோதனையை மேற்கொண்ட உதவி சட்ட வைத்திய அதிகாரி தன்தெனிய ஆராய்ச்சி, மேலதிக பரிசோதனைக்காக உடற்பாகங்களை அரச மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அதற்கமைய, நேற்று (21) வௌியிடப்பட்ட மேலதிக பரிசோதனை அறிக்கைக்கு அமைய, உயிரிழந்த நபரின் சுவாசப்பையை அண்மித்த பகுதியில் கறுப்பு பூஞ்சை தொற்றியிருந்ததாக, அரச மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பூஞ்சை நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர உறுதி செய்துள்ளார். COVID நிமோனியாவுடன் தொடர்புடைய கறுப்பு பூஞ்சை தொற்றுக்குள்ளானவர்கள் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட போதிலும், இதனால் உயிரிழந்த முதலாவது நபராக குறித்த நபர் காணப்படுவதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய விசேட நிபுணர் ரோஹான் பீ. ருவன்புர சுட்டிக்காட்டினார்.