ஆரம்ப பாடசாலைகள் இன்று (21) திறப்பு

200 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட ஆரம்ப பாடசாலைகள் திறப்பு

by Staff Writer 21-10-2021 | 9:39 AM
Colombo (News 1st) 200 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட ஆரம்பப் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (21) ஆரம்பமாகியுள்ளன. எவ்வாறாயினும், சம்பள முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படும் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க நடவடிக்கைக்கு மத்தியில் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எவ்வாறு இடம்பெறுமென கல்வி அமைச்சிடம் வினவியபோது, மாணவர்களுக்காக இன்றும் நாளையும் பாடசாலை மட்டத்தில் விசேட செயற்றிட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். "மகிழ்ச்சியான மனநிலையுடன் பாடசாலைக்கு செல்வோம்" எனும் தொனிப்பொருளில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார். இதற்கான நடவடிக்கைகளை கண்காணிக்கவும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயவும் கோட்ட மற்றும் வலயக்கல்வி மட்டத்தில் அதிகாரிகளை நியமித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். இதற்கு மேலதிகமாக அபிவிருத்திக் குழுவின் ஒத்துழைப்பை பெறவுள்ளதாக அவர் மேலும் கூறினார். மாணவர்களின் சுகாதார நிலையை கண்காணிப்பதற்காக அனைத்து வலயங்களையும் உள்ளடக்கி, விசேட வைத்தியர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இதற்கான ஒத்துழைப்பை இலங்கை மருத்துவ சங்கத்தின் உறுப்புரிமையை பெற்ற வைத்தியர்கள், தாமாகவே முன்வந்து வழங்கியுள்ளதாக அவர் கூறினார். இதேவேளை, ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய இன்றும் (21) நாளையும் (22) தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடருமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.