அதிக இலாபத்தை பெற்றுக்கொடுப்பதே எதிர்பார்ப்பு

விவசாயிகளுக்கு அதிக இலாபத்தை பெற்றுக்கொடுப்பதே அரசின் எதிர்பார்ப்பு - ஜனாதிபதி

by Staff Writer 21-10-2021 | 10:18 PM
Colombo (News 1st) விவசாயிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் எதிர்பார்க்கும் இலக்கை நோக்கி பயணிக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சரியானதை செய்வது சவாலான விடயம் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். கமநல சேவை உத்தியோகத்தர்களுடன் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். சுற்றாடலையும் பொதுமக்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பதுடன், அதிக இலாபத்தை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பு எனவும் கமநல சேவை உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி தௌிவுபடுத்தியுள்ளார். அடுத்த தலைமுறையினரை பயன்பெறச் செய்வதே பசுமை விவசாயத்தின் இலக்காகும் என  ஜனாதிபதி கூறியுள்ளார். உலகம் ஏற்றுக்கொண்டுள்ள உயர் சுற்றாடல் பாதுகாப்புடன் கூடிய உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, நைட்ரஜன் உரத்துடன் திரவ நைட்ரஜனை பெற்றுக் கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவை எதிர்வரும் நாட்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இதனிடையே, உரிய நேரத்திற்கு உரத்தை விவசாயிகளின் கைகளுக்கு வழங்குவதன் மூலமும் சரியான தௌிவூட்டல்களை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுப்பதன் மூலமும் விவசாயிகளுக்குள் இருக்கும் பயம் மற்றும் பின்வாங்கும் தன்மையை நிவர்த்தி செய்துகொள்ள முடியும் என கமநல சேவை உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.