காணாமல் போயிருந்த இந்திய மீனவர் சடலமாக மீட்பு

by Staff Writer 20-10-2021 | 11:33 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கோவளம் கலங்கரையில் காணாமல்போன இந்திய மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மீனவரை தேடும் பணிகள் நேற்று (19) முதல் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவரது சடலம் இன்று (20) காலை மீட்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 04 படகுகளில் சர்வதேச கடல் எல்யை மீறி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து நேற்று முன்தினம் மாலை மீன் பிடித்துள்ளனர். குறித்த பகுதிக்கு இலங்கை கடற்படையினர் சென்ற சந்தர்ப்பத்தில் தமிழக மீனவர்கள் தமது படகுகளில் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். இவ்வாறு தப்பிச் செல்ல முயற்சித்த படகொன்றே இலங்கை கடற்படையினரின் கப்பலில் மோதி கவிழ்ந்துள்ளது. குறித்த படகில் இருந்த சு. சுகந்திரன், அ. சேவியர் ஆகிய மீனவர்களே இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், காணாமல் போன ர. ராஜ்கிரன் எனும் மீனவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டதுடன், இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் தமிழகத்தின் கோட்டைப்பட்டினம் மீனவர்களால் நேற்று சாலை மறியல் பேராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.