by Staff Writer 19-10-2021 | 4:54 PM
Colombo (News 1st) ஏழு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஒரு தொகை தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் 25 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்தார்.
குறித்த ஊழியர் தமது உடலில் மிகவும் சூட்சுமமான முறையில் தங்கத்தை மறைத்து, விமான நிலைய வளாகத்திலிருந்து வௌியே கொண்டுசெல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
சந்தேகநபரிடமிருந்து 04 கிலோகிராமுக்கும் அதிகமான 48 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவை அரச உடைமையாக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை சுங்கப்பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.