by Staff Writer 19-10-2021 | 10:31 PM
Colombo (News 1st) ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (19) 21 வருடங்கள் ஆகின்றன.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனை நினைவுகூரும் நிகழ்வு யாழ். ஊடக அமையத்தில் இன்று பகல் நடைபெற்றது.
நிமலராஜனின் உருவப்படத்திற்கு யாழ். மாநகர சபை முதல்வரும் வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளரும் இணைந்து மலர் மாலை அணிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து நினைவுச்சுடரை ஏற்றி ஊடகவியலாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
மட்டு. ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஊடகவியலாளர் நிமலராஜனின் 21 வது ஆண்டு நினைவு நாளான இன்று அஞ்சலி நிகழ்வொன்றை நடத்தினர்.
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி இரவு அடையாளந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.