இலங்கை கடலில் காணாமற்போன தமிழக மீனவரை தேடும் பணி தொடர்கிறது

by Staff Writer 19-10-2021 | 8:23 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, கோவளம் கலங்கரை கடற்பகுதியில் விபத்துக்குள்ளான படகிலிருந்து காணாமற்போன தமிழக மீனவரை தேடும் பணியில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை கைது செய்யச்சென்ற இலங்கை கடற்படையினரின் படகில் தமிழக மீனவர்களின் படகு மோதியுள்ளது. மூழ்கிய படகிலிருந்த மீட்கப்பட்ட மேலும் இரண்டு தமிழக மீனவர்களை கடற்படையினர் ஊர்காவற்றுறைக்கு அழைத்து வந்துள்ளனர். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு படகுகளில் சர்வதேச கடல் எல்யை மீறி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து நேற்று (18) மாலை மீன் பிடித்துள்ளனர். குறித்த பகுதிக்கு இலங்கை கடற்படையினர் சென்ற சந்தர்ப்பத்தில் தமிழக மீனவர்கள் தமது படகுகளில் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இவ்வாறு தப்பிச்செல்ல முயற்சித்த படகொன்றே இலங்கை கடற்படையினரின் கப்பலில் மோதி கவிழ்ந்துள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது படகில் மூன்று மீனவர்கள் இருந்ததுடன் அவர்களில் இருவரை கடற்படையினர் மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர். காணாமற்போன மீனவரை தேடும் பணியின்போது இன்று (19) பகல் வேளையில் படகு கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். குறித்த படகிலிருந்த சு. சுகந்திரன், அ. சேவியர் ஆகிய மீனவர்களே இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. படகிலிருந்து ர. ராஜ்கிரன் என்ற மீனவரே காணாமால் போயுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின்  இராமேஷ்வரம் செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் தமிழகத்தின் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இன்று சாலை மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.