பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவர் கைது

கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த 2 பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவர் கைது

by Staff Writer 16-10-2021 | 3:26 PM
Colombo (News 1st) ​கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளனர். நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கொழும்பு - முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் முகத்துவாரம் எலிஹவுஸ் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போதே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். பாழடைந்த வீட்டுத்தோட்டமொன்றிலிருந்து சத்தம் கோட்ட போது, அங்கு சென்ற கான்ஸ்டபிள்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.