வவுனியாவில் மனைவியை எரியூட்டி கொலை செய்த கணவன் கைது

by Staff Writer 15-10-2021 | 12:14 PM
Colombo (News 1st) வவுனியா - பூவரசங்குளம் பகுதியில் தனது மனைவியை எரியூட்டி கொலை செய்த கணவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்தது. பூவரசங்குளம் - கற்பகபுரம் பகுதியில் குடும்ப தகராறின் போது, கணவனால் மனைவி கீழே தள்ளிவிடப்பட்டுள்ளார். பின்னர் , மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய பின்னர் கணவன் தலைமறைவாகியமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வீட்டில் தீ பற்றிய போது, உயிரிழந்த பெண்ணின் மகனும் அயலவர்களும் இணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும், தீக்கிரையாகிய பெண் உயிரிழந்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் 43 வயதான பெண்ணொருவரே தீ மூட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் தொடர்பில் 46 வயதான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். பூவரசங்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.