சேவைக்கு சமூகமளிக்கும் ஆசிரியர்களை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சரத் வீரசேகர எச்சரிக்கை

by Staff Writer 15-10-2021 | 7:55 PM
Colombo (News 1st) எதிர்வரும் 21 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. எனினும், ஆசிரியர் - அதிபர் சம்பள பிரச்சினைக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடாது சேவைக்கு சமூகமளிக்கும் ஆசிரியர்களை அச்சுறுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கண்டி - பொல்கொல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர், ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார். எனினும், இந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லையென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் தொடர்பில் ஆசிரியர்கள் சிந்தித்தாலும், அரசாங்கம் ஆசிரியர்கள் குறித்து சிந்திக்கவில்லை என ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.