வசந்த கரன்னாகொடவிற்கு மன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

சட்டமா அதிபர் மற்றும் வசந்த கரன்னாகொடவிற்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

by Staff Writer 15-10-2021 | 1:20 PM
Colombo (News 1st) சட்டமா அதிபர் மற்றும் Admiral of the fleet வசந்த கரன்னாகொடவை எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக அறிவித்தல் பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை வாபஸ் பெறுவதற்கு சட்டமா அதிபர் எடுத்துள்ள நடவடிக்கையை சவாலுக்கு உட்படுத்தி, கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் நால்வரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2008, 2009 ஆம் ஆண்டுகளில் கொழும்பில் வௌ்ளை வேன்களை பயன்படுத்தி 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் 14 ஆவது பிரதிவாதியான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை தொடர்ந்தும் முன்னகர்த்தப் போவதில்லையென சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சமீபத்தில் அறிவித்தார். சட்ட மா அதிபரின் குறித்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனுவை எதிர்வரும் 29 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் குழாம் இன்று தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க, வழக்கின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட மா அதிபர் மற்றும் வசந்த கரன்னாகொடவை எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்குமாறு மனுதாரர் தரப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.