தமிழக மீனவர்கள் கைது:மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கையில் கைதாகியுள்ள 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

by Staff Writer 15-10-2021 | 8:07 PM
Colombo (News 1st) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 23 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 11 ஆம் திகதி நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களும் 13 ஆம் திகதி பருத்தித்துறை அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் காரைநகர் கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், "இந்திய, இலங்கை மீனவர்களுக்கிடையேயான இந்த நீண்ட கால பிரச்சினையில் உடனடியாக பிரதமர் தலையிட்டு, நிரந்தரமாகத் தீர்த்திட, உறுதியான வழிமுறைகளைக் காண வேண்டுமென்றும் தனது கடிதத்தின் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.