வவுனியாவில் தீயில் எரிந்து பெண் பரிதாபமாக பலி

by Bella Dalima 14-10-2021 | 6:44 PM
Colombo (News 1st) வவுனியா - கற்பகபுரம் பகுதியில் தீக்காயங்களுடன் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் வசித்த வீட்டிலிருந்து இன்று (14) காலை புகை வெளிவருவதை அவதானித்த அயலவர்கள் உடனடியாக ஜன்னலூடாக கண்காணித்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், உடனடியாக விரைந்து செயற்பட்ட அயலவர்கள் கதவை உடைத்து தீயை அணைப்பதற்கு முயற்சி செய்த போதிலும் அது பலனளிக்காத நிலையில், வீட்டிலிருந்த பெண் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான 43 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் நாளை (15) ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஏனைய செய்திகள்