மத்திய வங்கி வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டு இருப்புகள் மறை பெறுமதியை காட்டியது

by Bella Dalima 14-10-2021 | 9:47 PM
Colombo (News 1st) அண்மித்த வரலாற்றில் முதற்தடவையாக இலங்கை மத்திய வங்கியில் வௌிநாட்டு சொத்து மறை பெறுமதியை அடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் முதற்பகுதியில் மத்திய வங்கியின் வௌிநாட்டு சொத்து 83.9 பில்லியனாக காணப்பட்டது. அதன் பெறுமதி 400 மில்லியன் அமெரிக்க டொலராகும். மத்திய வங்கியின் வௌிநாட்டு சொத்துக்களின் பெறுமதி கடந்த சில மாதங்களாக வீழ்ச்சி கண்டது. ஆகஸ்ட் இறுதியில் பதிவான தொகையுடன் ஒப்பிடுகையில், ஜனவரி மாத இறுதியில் அதன் பெறுமதி குறைவாகவே காணப்பட்டது. ஜனவரி மாதத்தில், அந்த சொத்துக்களின் பெறுமதி 2.1 பில்லியனாக காணப்பட்டது. அத்துடன், நாட்டின் ஒட்டுமொத்த வங்கிக்கட்டமைப்பில் உள்ள வௌிநாட்டு சொத்துக்களின் பெறுமதி மிகவும் மோசமடைந்தது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், 'சுதந்திரத்தின் பின்னர் கடந்த 15 வருட காலப்பகுதியில் மறைப் பெறுமதியை காண்பித்த பல சந்தர்ப்பங்கள் உள்ளன. எனினும், அது தற்காலிகமானது. ஒரு கொடுக்கல் வாங்கல் மூலம் இதன் பெறுமதி மாற்றமடையலாம். அந்த நிதி கொடுக்கல் வாங்கலை அடுத்த வாரம் மேற்கொள்ள முடியும்,' என குறிப்பிட்டார்.