by Bella Dalima 12-10-2021 | 5:32 PM
Colombo (News 1st) சதொச வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட நால்வரும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று வத்தளை நீதவான் ஹேஷான் டி மெல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். தமது தரப்பினருக்கு பிணை வழங்குமாறு பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் இதன்போது கோரியுள்ளனர்.
எனினும், விசாரணை நிறைவுபெறும் வரை சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க வேண்டாமென குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சதொச நிறுவனத்தில் மோசடியாக வௌ்ளைப்பூண்டு கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், சதொச லிமிட்டட் நிறுவனத்தில் கொள்வனவு பிரிவின் பிரதி பொது முகாமையாளராகக் கடமையாற்றிய பெண் ஒருவர், லங்கா சதொச லிமிட்டட் நிறுவனத்தின் சிரேஷ்ட விநியோகப் பிரிவு முகாமையாளர், சதொச வெலிசறை களஞ்சியத்தில் மொத்த விற்பனை நிலைய முகாமையாளர்களாக கடமையாற்றிய இருவர் ஆகியோர் நேற்று (11) கைது செய்யப்பட்டனர்.
38 முதல் 42 வயதிற்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.