மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

by Bella Dalima 12-10-2021 | 12:51 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி M.N. அப்துல்லாவினால் வழக்கு நேற்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், ஆணையாளர் தொடர்ச்சியாக செயற்பட்டதாக தெரிவித்து மாநகர சபை முதல்வரினால் அவரிடம் கையளிக்கப்பட்டிருந்த 10 அதிகாரங்கள் சபை தீர்மானத்தின் அடிப்படையில் மீள பெறப்பட்டன. இந்த அதிகாரங்களில் ஆணையாளர் தலையிடக்கூடாது என மேல் நீதிமன்றத்தினால் கட்டளை வழங்கப்பட்டிருந்தது. எனினும், அந்த தீர்மானத்தினை மீறும் வகையில், மாநகர சபையின் ஆணையாளர் செயற்பட்டதன் காரணமாக, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கையும் ஏற்கனவே மாநகர சபை முதல்வரினால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை வழக்கையும் ஒரே நாளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதன் ஊடாக இதற்கான தீர்வினை வழங்க முடியும் என நீதிமன்றம் கருதியதன் அடிப்படையில் வழக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.