by Bella Dalima 12-10-2021 | 3:58 PM
Colombo (News 1st) அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவிற்கு கொண்டு வருவதற்கான அரசாங்கத்தின் தீர்வுத் திட்டம் தொடர்பில் இன்று தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு தௌிவுபடுத்தப்பட்டது.
இன்று பகல் 12.30 அளவில் அலரி மாளிகைக்கு சென்ற ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினர் மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் பிரதமருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாட்டிற்கான தீர்வினை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது இரண்டு கட்டங்களின் கீழ் இந்த பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், தமது சம்பளப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் வழங்கும் தீர்வினை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகள் கூடி கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
சம்பள கொடுப்பனவை மூன்று கட்டங்களாக வழங்குவதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
எனினும், உத்தேச சம்பளத்தை ஒரே தடவையில் வழங்குமாறு தொழிற்சங்க பிரதிநிதிகள் தொடர்ச்சியாக வலியுறுத்திய போதிலும் இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவு செய்வதா, இல்லையா என்பது தொடர்பில் அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.